தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலையானது நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளாக சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்திற்கு அடிப்படையாக உள்ளது. நமது நாட்டிலுள்ள மாநிலத் தலைநகரங்கள், முக்கிய துறைமுகங்கள், இரயில்வே சந்திப்புகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை இணைப்பதுடன் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மூல காரணமான இடங்களையும் இணைக்கின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில், 1472 கி.மீ. நீளமுள்ள சாலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலமாகவும், மீதமுள்ள 5134 கி.மீ. நீளமுள்ள சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேம்பாட்டுப் பணி/பராமரிப்புப் பணிகள், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை அலகானது தலைமைப் பொறியாளரின் கீழ் 4 வட்டங்கள் மற்றும் 13 செயலாக்க கோட்டங்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்கென 1 கண்காணிப்பு பொறியாளர் மற்றும் 4 தரக் கட்டுப்பாடு கோட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.
மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், அகலப்படுத்துதல், மேம்படுத்துதல், உறுதிப்படுத்துதல், தரம் உயர்த்துதல், பாலங்களை மறுசீரமைத்தல்/ கட்டுதல்/திரும்பக் கட்டுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை அலகின் முக்கிய செயல்பாடுகள்:
கீழ்க்கண்ட திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை பணிகள்
- திட்டப் பணிகள் (தேசிய நெடுஞ்சாலை மூலப் பணிகள்)
- திட்டம் சாரா பணிகள் காலமுறை புதுப்பித்தல் / ஓடுதள தர
- சாலை பாதுகாப்புப் பணிகள்
- வெள்ள நிவாரண பணிகள்
மத்திய நிதியுதவி பணிகள்
- மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டம்
- பிரதம மந்திரியின் கிராமச் சாலைகள் திட்டம்/பாரத் நிர்மான் .
1. தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயலாக்கப்படும் திட்டங்கள்
தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் செயலாக்கப்படும் முக்கிய பணிகளுக்கான நிதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூலம் பெறப்படுகிறது.
1.1 திட்டம் சார்ந்த பணிகள்
2019-20-ம் ஆண்டின் ஆண்டு திட்டத்தில் 101.38 கி.மீ நீள சாலைப் பணிகள் ரூ.423.10 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் ரூ.1435.19 கோடி மதிப்புள்ள 255.26 கி.மீ நீளமுள்ள 64 பணிகள் நிலுவை பணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும், மத்திய அமைச்சகத்தால் 2020-21ம் ஆண்டிற்காக ரூ.1138.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆண்டுத்திட்டம் 2020-21ன் கீழ் 114.425 கி.மீ நீளமுள்ள 11 சாலை மற்றும் பாலப்பணிகள் ரூ.715.85 கோடி மதிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 96.34 கி.மீ நீளமுள்ள பணிகள் முடிக்கப்பட்டன. செப்டெம்பர் 2020 வரை ரூ. 305.84 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டது.
முடிவுற்ற / நடைபெறும் சில முக்கிய திட்டப்பணிகள் பின்வருமாறு.
அட்டவணை 1: முடிக்கப்பட்ட திட்டப் பணிகள்:
(ரூ. கோடியில்)
வ.எண் | திட்டப் பணிகளின் விவரம் | மதிப்பீடு |
---|---|---|
1 | தே.நெ.381 (அவினாசி – திருப்பூர் - அவினாசிபாளையம் சாலை) கி.மீ 0/0 – 31/8 இல் கடின தள புருவத்துடன் கூடிய நான்கு வழித் தடமாக அகலப்படுத்துதல் | 162.70 |
2 | தே.நெ 67 ல் கி.மீ 362/2 – 362/8 மற்றும் கி.மீ 364/500-370/0-ல் உறுதிப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல். | 40.63 |
3 | தே.நெ.67 ல் (ஊட்டி) கி.மீ 428/0-429/8 மற்றும் கி.மீ 431/9-434/4 ல் சாலை பாதுகாப்பிற்காக மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு சுவர், நடை பாதை, மழைநீர் வடிகால் அமைத்தல் | 31.60 |
4 | தே.நெ.209 கி.மீ 170/0 – 265/800 தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 177/2, 102/2, 215/8 & 221/10இல் சிறு பாலங்களை திரும்பக் கட்டுதல் | 49.06 |
அட்டவணை2 : நடைபெற்று வரும் திட்டப்பணிகள்:
(ரூ. கோடியில்)
வ.எண் | திட்டப் பணிகளின் விவரம் | மதிப்பீடு |
---|---|---|
1 | தே.நெ.383 ல் (திண்டுக்கல் – நத்தம் சாலைப் பகுதி) கி.மீ 0/0 – 38/0ல் இரு வழித்தடத்தினை கடின தள புருவத்துடன் கூடிய இருவழித்தடமாக அமைத்தல் | 240.38 |
2 | தே.நெ. 383 (நத்தம் - கொட்டாம்பட்டி சாலைப் பகுதி) கி.மீ 38/0 – 51/770 இல் இருவழித்தடத்தினை கடின தள புருவத்துடன் கூடிய இருவழித்தடமாக அமைத்து உறுதிப்படுத்துதல் | 69.73 |
3 | தே.நெ. 234 ல் கி.மீ 0/0-23/100 (ம) 29/250-47/400 இருவழித்தடத்தினை கடின தள புருவத்துடன் கூடிய இருவழித்தடமாக அகலப்படுத்துதல், 23/100-29/250 வரை (குடியாத்தம் புறவழிச்சாலை) மற்றும் கி.மீ. 47/400-56/00 ( வேலூர் புறவழிச்சாலை) உறுதிப்படுத்துதல் | 138.06 |
4 | தே.நெ. 179 A ல் கி.மீ 36/0-80/0 வரை இருவழித்தடத்தினை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் (சேலம்-திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை) | 297.55 |
5 | தே.நெ. 179 A ல் கி.மீ 80/0-125/0 வரை இருவழித்தடத்தினை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் (சேலம்-திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை). | 302.62 |
6 | தே.நெ. 49 நீட்சி ல் கி.மீ 15/2 ல் மேம்பாலம் கட்டுதல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்). | 52.04 |
7 | தே.நெ. 383 நீட்சி-ல் (கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலை) கி.மீ. 1/500-30/350 வரை அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல். | 113.96 |
1.2. காலமுறை புதுப்பித்தல் / ஓடுதள தரத்தை மேம்படுத்துதல் திட்டம்
காலமுறை புதுபித்தல் திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் நிதி ஆண்டில் 98.61 கி.மீ நீளமுள்ள 13 பணிகள் ரூ.90.93 கோடி மடிப்பிற்கு மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அவற்றில் 56.40 கி.மீ நீள 10 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 2020 வரை ரூ.40.00 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டது.
1.3. சாலையில் விபத்துப் பகுதிகளை சீரமைத்தல்:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், டிசம்பர் 2019ல் விபத்துகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 748 எண்ணிக்கையிலான கரும்புள்ளிகளாக விபத்து பகுதிகளை கண்டறிந்து தெரியப்படுத்தியது.
மொத்த விபத்துப் பகுதிகளின் எண்ணிக்கை – 748
i) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள சாலைகளிலும் மற்றும் இதர சாலைகளிலும் - 541.
ii) மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கீழ் பராமரிப்பில் உள்ள சாலைகளில் - 207.
மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கீழ் 207 விபத்து பகுதிகளின் விவரம் கீழ்கண்டவாறு,
- நிரந்தரமாக சீரமைக்கப்பட்டவை – 22.
- தற்காலிகமாக சீரமைக்கப்பட்டவை - 111.
- தற்போது நடைபெறும் திட்டப்பணிகளில் உள்ளடங்கியவை – 26.
- 2019-20 ஆம் ஆண்டில் 19 விபத்து பகுதிகளை சீரமைக்க மத்திய அமைச்சகத்தால் ரூ.55.07 கோடி மதிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைப்பெற்று வருகிறது.
- 2020-21 ஆம் ஆண்டில் 21 விபத்து பகுதிகளை சீரமைக்க மத்திய அமைச்சகத்தால் ரூ.97.60 கோடி மதிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளது.
- மேலும், 30 விபத்து பகுதிகளை சீரமைக்க மத்திய அமைச்சகத்திற்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டதும் பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள அதிக விபத்துக்குள்ளாகும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி பிரேரணை அனுப்பப்பட உள்ளது.
1.4. வெள்ளச் சேத பணிகள்
போக்குவரத்து தகுதியினை உறுதிபடுத்தும் பொருட்டு, மழை பொழிவு மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் மண்சரிவுகளை உடனடியாக அகற்றி, முறிந்து விழுந்த மரங்களை நீக்கி மற்றும் சாலை பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைத்து தடையின்றி போக்குவரத்து செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
2. மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள்
மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வின் மீது விதிக்கப்படும் தீர்வையிலிருந்து மத்திய சாலை நிதிச் சட்டம் 2000 இன் கீழ் மத்திய சாலை நிதியை உருவாக்கியது. மாநில சாலை மேம்பாட்டு பணிகளுக்கு இந்நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வுகளுக்கு 30 சதவீதம் மற்றும் புவியியல் பரப்பளவுக்கு 70 சதவீதம் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்நிதிஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2019-20 இல் புதுப்பிக்கப்பட்ட மத்திய சாலை நிதித்திட்டம் மற்றும் பாரத் நிர்மான் (பராமரிப்பு நிதி) திட்டத்தில் ரூ.1052.65 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2020-21 இல் ரூ.930.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2.1. புதுப்பிக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டம்:
2020-21 ஆம் நிதி ஆண்டில், புதுப்பிக்கப்பட்ட மத்திய சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 1596.06 கோடி மதிப்பிலான 235.31 கி.மீ நீள 38 சாலைப் பணிகள் மற்றும் 13 பாலப்பணிகள் நிலுவைப் பணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இவற்றில் 2020-21 ல் 498.53 நீள 12 சாலைப் பணிகள் மற்றும் 3 பாலப்பணி ரூ. 498.53 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு,
(ரூ. கோடியில்)
வ.எண் | திட்டப் பணிகளின் விவரம் | மதிப்பு |
---|---|---|
i) சென்னை புறநகர் பகுதி: | ||
1 | கி.மீ 0/0 -19/6 -இல் வாலாஜபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி சாலையை அகலப்படுத்துதல் பணி | 121.65 |
2 | கி.மீ 0/0- 8/6 இல் எழிச்சூர் - பாலூர் சாலையை அகலப்படுத்துதல் பணி | 41.80 |
3 | கி.மீ 13/2 – 28/8 இல் கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையை அகலப்படுத்துதல் | 132.00 |
4 | கி.மீ 0/0 – 21/8 இல் செங்கல்பட்டு- திருப்போரூர் சாலையை அகலப்படுத்துதல் | 126.75 |
5 | கி.மீ 0/0 – 17/6 இல் கூடுவாஞ்சேரி – கோட்டையூர் சாலையை அகலப்படுத்துதல் | 76.87 |
ii) மதுரைநகர்: | ||
6 | வைகை ஆற்றின் கரைகளை மேம்படுத்தி சாலையை உறுதிப்படுத்துதல் | 303.59 |
7 | கி.மீ 0/0 -2/0 இல் பழைய ஆஸ்டின்பட்டி சாலையை நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் | 21.20 |
8 | வைகை தெற்கு நதி சாலை திண்டுக்கல் - தெப்பக்குளம் சாலையை அகலப்படுத்துதல் | 22.00 |
9 | வைகை வடக்கு நதி சாலை திண்டுக்கல் - குருவிக்காரன் சாலையை அகலப்படுத்துதல் | 33.00 |
iii) கோயம்புத்தூர்நகர்: | ||
8 | கோயம்புத்தூர் நகரத்தில் ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் பணி | 244.79 |
9 | கோயம்புத்தூர் நகரத்தில் கவுண்டம்பாயைம் சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் பணி | 64.00 |
10 | கோயம்புத்தூர் நகரத்தில் ஜி.என் மில் சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் பணி | 40.00 |
மேற்கண்ட பணிகளானது, சென்னை புறநகர் பகுதியின் தே.நெ 45 சாலையிலும், மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2.2. பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்:
மத்திய அரசு, நாட்டில் வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக இணைக்கப்படாத குடியிருப்புகளுக்கு சாலை இணைப்பு வழங்குவதற்காக பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்திற்கான நிதி மத்திய சாலை நிதியிலிருந்து பெறப்படுகிறது. சீரான தரநிலையில் கிராமச் சாலைகளை அமைத்து, அவற்றை தொடர்ந்து பராமரிக்க மாநில அளவிலான கொள்கை வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ்சாலைப் பணிகள் ஒவ்வொரு கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் பகுதி I (ம) II-ல் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பராமரிப்பு செயலாக்கத்தில் உள்ளன.
2.3. மாநிலங்களுக்கிடையிலான சாலைகளை இணைக்கும் திட்டம் :
மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களுக்கிடையிலான சாலைகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செல்லம்பாளையம் - பர்கூர் - கொள்ளேகால் சாலையினை 41.20 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தும் பணி ரூ.72.91 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. 12.60 கி.மீ நீள பணிகள் முடிக்கபட்டன.
3. இதர செயல் திட்டங்கள்
3.1. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்பட்ட பணிகள் :
3.1.1. இரும்புலியூர் -வண்டலூர் (தே.நெ 45) சாலையை அகலப்படுத்துதல்
சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இரும்புலியூர் - வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையை (2.30 கி.மீ ) ரூ. 20.77 கோடி மதிப்பில் எட்டு வழித்தடமாக அகலப்படுத்துவதற்கு மாநில அரசின் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.
3.1.2. வண்டலூர்- கூடுவாஞ்சேரி (தே.நெ 45) சாலையை அகலப்படுத்துதல்
இரும்புலியூர் - வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாட்டு பணியின் தொடர்ச்சியாக 5.30 கி.மீ நீளமுள்ள வண்டலூர்- கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையை ரூ. 44.48 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போதுபணிகள் நடைபெற்று வருகின்றன.
3.2. சேது பாரதம் திட்டம் - தேசிய நெடுஞ்சாலைகளில் இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப்பாலங்கள் கட்டுதல்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரயில்வே கடவுகளை சாலை இரயில்வே மேம்பாலம் / கீழ்பாலங்களாக மாற்றும் நோக்கத்துடன் மத்திய அரசால் சேது பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரயில்வே கடவுகளுக்குப் பதிலாக 8 மேம்பாலங்கள் / கீழ் பாலங்கள் கட்டும் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்களை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நியமித்துள்ளது. இவற்றில் 2 பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உரியது.
வ.எண் | தே.நெ. எண். | கடவு எண் | இடம் |
---|---|---|---|
1 | 49 நீட்சி | 17 | கி.மீ 22/2 (செக்கானூரணி அருகில்) |
2 | 234 | 109 அ | கி.மீ.81/6 (கண்ணமங்கலம் - கனியம்பாடி) |
3 | 49 நீட்சி | 68 | கி.மீ 72/6-7 (தேனி அருகில்) |
4 | 49 நீட்சி | 85 | கி.மீ 93/4 (போடி அருகில்) |
5 | 208 | 503 | கி.மீ 99/4 (தென்காசி – இளஞ்சி அருகில்) |
6 | 234 | 86 | கி.மீ 103/4 ( போளூர் - மாதிமங்கலம்) |
கடவு எண். 17 பதிலாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2020-21 ஆண்டு திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணி ஒப்பந்தபுள்ளி நிலையில் உள்ளது. கடவு எண். 109 A, 68, 85 பதிலாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு ஒப்புதல் பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 2 இரயில்வே மேம்பாலம் வரும் ஆண்டின் ஆண்டுத் திட்டப் பணிகளில் எடுத்துக்கொள்ளப்படும்.
3.3. தரம் உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துதல்:
3.3.1. தரம் உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணி விவரம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் 841 கி.மீ நீளத்திற்க 7 மாநில சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்பட்டன. அவற்றுள் கீழ்காணும் இரு சாலைகளில் மேம்பாட்டுப்பணிகள் மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் நடைபெற்று வருகின்றன.
- திண்டுக்கல் – காரைக்குடி சாலை(தே.நெ383)
- சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை(தே.நெ 179அ).
கீழ்காணும் 5 சாலைகளில் மேம்பாட்டுப்பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.
- பெரம்பலூர் - ஆத்தூர் சாலை (தே.நெ 136)
- தொப்பூர் - மேட்டூர் - பவானி - ஈரோடு சாலை (தே.நெ 544 எச்)
- மாலூர் - ஒசூர் - ராயகோட்டை – தருமபுரி அதியமான்கோட்டை(தே.நெ844)
- ஒரகடம் - செய்யார் - திருவண்ணாமலை – அரூர் (தே.நெ 179 பி)
- கும்பகோணம் - சீர்காழி(தே.நெ 136 பி)
3.3.2. தேசியநெடுஞ்சாலையாக கொள்கை அளவில் உயர்த்தப்படவுள்ள மாநில சாலைகள் பின்வரும் மாநில சாலைகளை:
பின்வரும் மாநில சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக கொள்கை அளவில் உயர்த்தப்பட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.
அட்டவணை: தேசிய நெடுஞ்சாலையாக கொள்கை அளவில் உயர்த்தப்படவுள்ள மாநில சாலைகள்
வ.எண் | சாலையின் பெயர் | நீளம் -கி.மீ ல் |
---|---|---|
1 | திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி சாலை | 65.00 |
2 | வள்ளியூர்- திருசெந்தூர் சாலை | 70.00 |
3 | கொள்ளேகால் – ஹனூர் – எம்.எம் மலை – பாலாறு சாலை – தமிழ்நாட்டு எல்லையில் மேட்டூர் வரை | 30.00 |
4 | மேட்டுப்பாளையம் -பவானி சாலை | 98.00 |
5 | அவினாசி – மேட்டுப்பாளையம் சாலை | 38.00 |
6 | பவானி- கரூர் சாலை | 77.00 |
7 | பழனி- தாராபுரம் சாலை | 31.00 |
8 | ஆற்காடு- திண்டிவனம் சாலை | 91.00 |
மொத்தம் | 500.00 |
3.3.3. தேசிய நெடுஞ்சாலைகளாக கொள்கை அளவில் தரம் உயர்த்துவதற்கு கருத்துரு அனுப்பப்பட்ட சாலைகள்
மேலும் கூடுதலாக 16 மாநில சாலைகள் 1032.40 கி.மீ நீளத்திற்கு கொள்கை அளவில் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்படும் பொருட்டு பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் கொள்கை முடிவின் படி விரிவான திட்ட அறிக்கை மற்றும் தரம் உயர்த்தப்படவுள்ள பணி நிறுத்தப்பட்டுள்ளது.
4. பேருந்து முனையம்:
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மேம்பட்ட நவீன பயணியர் வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள்(Bus Port) சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது சேலத்தில் பேருந்து முனையம் அமைப்பதற்கு கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், தள தரவுகளான மண்பரிசோதனை தரவு, தள மேற்பரப்பு ஆய்வு, பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகள் சம்பந்தமான ஆய்வுகள் ஆகியவை (NHIDCL) தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தினால் DIMTS ஆலோசகரை ஈடுபடுத்தி சேகரிக்கப்பட்டு வரைவு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பேருந்து முனையத்திற்கான கூடுதல் தேவைகளை விரிவான திட்ட அறிக்கையில் சேர்க்குமாறு NHIDCL-யிடம் தெரிவிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை முடிவுற்றதும் சேலம் பேருந்து முனைய பணி மேற்கொள்ளப்படும்.
மதுரை பேருந்து முனையத்திற்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கரடிக்கல் கிராமத்தில் மேய்ச்சல் நிலத்தினை தகுதி வாய்ந்த நிலமாக தேர்வு செய்யப்படது. மேலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க NHIDCL-க்கு பிரேரணை அனுப்பப்பட்டது. நில மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு கோயமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அரசாணை எண். 123, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 03.10.2019 ல் கோவை மாநகராட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆகையால் பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் பேருந்து முனையம் கட்டும் பணியை கைவிடுமாறு தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்திடம் (NHIDCL) கோரப்பட்டுள்ளது.
5. இணையவழி கண்காணிப்பு:
5.1. நில எடுப்பு பணிகளை கணினிமயமாக்கல் :
நில எடுப்புப் பணிகளை இணைய வழி வாயிலாக விரைவாக மேற்கொள்ள மத்திய அமைச்சகம் தனிப்பட்ட இணைய தளத்தினை “பூமிராஷி” என்ற பெயரில் ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நில எடுப்பு அறிவிப்புகள் வெளியிடுவது மற்றும் இழப்பீடு வழங்குவது முதலிய பணிகளை விரைவாக மேற்கொள்ள வழி வகுக்கிறது. நில எடுப்பு விவரங்கள்பதிவேற்றப்பட்டு, நில எடுப்பு அதிகாரிகளால் (CALA) சரிபார்க்கப்பட்டு, மத்திய அமைச்சகத்தால் இணையதளம் மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
5.2. திட்ட கண்காணிப்பு தகவல் முறை :
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், திட்டப் பணிகளை கண்காணித்து அதனை துரிதப்படுத்த திட்ட கண்காணிப்பு தகவல் அமைப்பினை உருவாக்கி பணிகளின் அனைத்து நிலைகளிலும் கலந்தாய்வு செய்து விரைந்து முடிக்க வழி வகுத்துள்ளது. இந்த திட்ட கண்காணிப்பு தகவல் அமைப்பு, எளிய பயன்பாட்டுடன் உயர் அதிகாரிகள் பணிகளை கூர்ந்தாய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வாயிலாக தற்சமயம் பணிகளின்
• பணி உத்தரவு வழங்க உள்ள நிலை
• செயலாக்கத்தில் உள்ளவை மற்றும்
• விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலை
மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் வாயிலாக பணிகளின் நிலை குறித்து சீரான இடைவெளிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அமைச்சக உயர் அதிகாரிகள் பணிகளின் முன்னேற்றத்தினை காணொளி காட்சி வாயிலாக ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5.3. கரும்புள்ளிகள் கண்காணிப்பு கணினிமயமாக்கல்
விபத்துக்குள்ளாகும் கரும்புள்ளிகளின் சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பிற சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிலை மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்கும் பொருட்டு NIC ஒரு இணையவழி போர்டல் / மென்பொருள் தொகுதியை உருவாக்கியுள்ளது. அனைத்து கள அலுவலர்களும் உடனடி / தற்காலிக சீரமைப்பு பணிகளின் விவரங்கள், புகைப்படங்கள் / கரும்புள்ளிகளை சீரமைக்கும் முன்னும் அதன் பின்னும் பணி நடைபெறும்போதும் எடுக்கப்பட்ட வீடியோக்களின் விவரங்கள் மற்றும் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்களை எளிதாக கண்காணிக்க நிகழ்நேர அடிப்படையில் இணையவழி போர்டலில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.